Digvesh Rathi: `5 பந்துகளில் 5 விக்கெட்'- IPLல் 3 முறை அபராதத்துக்குள்ளான மிஸ்ட்ரி ஸ்பின்னர் அசத்தல்
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் கவனம் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 25 வயது அறிமுக சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி.
மொத்தம் 13 போட்டிகளில் 8 எக்கனாமியில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்த சீசனில் லக்னோ அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக கவனம் ஈர்த்தார்.
அதேசமயம், விக்கெட் எடுத்த பிறகு இவர் செய்யும் நோட்புக் செலிபிரேஷனால் பிசிசிஐ-யால் மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டார்.

ஏலத்தில் ஆரம்ப விலையான ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, அதில் அபராதமாக மட்டும் ரூ. 9.37 லட்சம் செலுத்தினர்.
இதனால், பலரும் திக்வேஷ் ரதிக்கு ஆதரவாக முன்வந்து, கோலி போன்ற வீரர்கள் இவ்வாறு ஆக்ரோஷமாக செலிபிரேஷன் செய்யும்போதும் பிசிசிஐ இதேபோல அபராதம் விதிக்குமா என்று கேள்வியெழுப்பினார்.
ஆனால், இதற்கெல்லாம் தனது பந்துவீச்சு மூலமாகவே திக்வேஷ் ரதி பதிலளித்து வந்தார்.
இந்த நிலையில், உள்ளூர் டி20 போட்டியொன்றில் 5 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் திக்வேஷ் ரதி.
இதில், முதலில் பேட்டிங் செய்த திக்வேஷ் ரதியின் சஹகல் கிரிக்கெட் கிளப் (SCC) அணி, 20 ஓவர்களில் 263 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, 264 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஏபி ரைசிங் அணி, 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் அடித்து தோல்விக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது, 15-வது ஓவரை வீசவந்த திக்வேஷ் ரதி முதல் ஐந்து பந்துகளிலேயே ஏபி ரைசிங் அணியின் மீதமிருந்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 112 ரன்கள் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றிபெறவைத்தார்.
Digvesh Rathi. 5 stars pic.twitter.com/tF4Nw0Gj0Q
— Lucknow Super Giants (@LucknowIPL) June 16, 2025
இந்தப் போட்டியில் மொத்தமாக 3.5 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதிக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பதோடு, அவர் விக்கெட் எடுத்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அந்த வீடியோவைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் ஷேர் செய்து, "திக்வேஷ் ரதி 5 ஸ்டார்ஸ்" என ட்வீட் செய்து பாராட்டியிருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயன்காவும் எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து வாழ்த்தியிருக்கிறார்.