Mathews : 'கேப்டனா இருக்கும்போதுதான் என் முடியெல்லாம் கொட்டுச்சு!' - மேத்யூஸ் கலகல
தற்போது நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். ஓய்வு முடிவைப் பற்றிப் பேசுகையில் மேத்யூஸ் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதாவது, ``நான் இலங்கை அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டு அணியை வழிநடத்தியபோது எனக்கு அதிகமாக முடி கொட்டியது. எல்லா வீரர்களுக்கும் இது நடக்கும் என நினைக்கிறேன்.
இலங்கை அணியாக இருந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் கேப்டனாக இருக்கும்போது உங்கள் தலையில் முடி குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு. அனைவரின் பார்வையும் உங்கள் மீது இருக்கும். அந்த பொறுப்பு வலியாக இருந்தாலும் நான் அதை அனுபவித்தே செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் மேத்யூஸ் 8167 ரன்களை எடுத்திருக்கிறார். சங்ககரா மற்றும் ஜெயவர்தனேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்திருக்கும் இலங்கை வீரர் மேத்யூஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.