ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்
Kohli: ``சச்சினை விட கோலி சற்று வித்தியாசமான குணமுடையவர்..'' - விவரிக்கும் லெஜண்ட் ஆண்டர்சன்
இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் முதல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது.
கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வை அறிவித்ததால், 2014-க்கு பிறகு முதல்முறையாக கோலி இல்லாமல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது.
இதனால், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி எப்படி செயல்படப்போகிறது என்பதோடு, கோலியின் இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கெதிராக அதிக விக்கெட்டுகள் (149) வீழ்த்தியவரான இங்கிலாந்தின் ஓய்வுபெற்ற லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி குறித்து பேசியிருக்கிறார்.
டாக்ஸ்போர்ஸ்ட்ஸ் (talkSPORTS) ஊடகத்துடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஆண்டர்சன், "2014-ல் முதல்முறையாகக் கோலி இங்கிலாந்து வந்தபோது அவருக்கெதிராக சற்று வெற்றிகரமாக இருந்தேன் நான்.
அவரின் வீக்னஸ் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
பிறகு, அடுத்த முறை அவரை நான் எதிர்கொண்டபோது, அது மாதிரியான பந்துகளை ஆட பயிற்சி எடுத்திருந்திருந்தார். முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார்.
உண்மையில் தனது ஆட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றார். அது எனக்கு மட்டுமல்லாது, பொதுவாக அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.
அவருக்கெதிரான முதல் தொடரில் நான்கைந்து முறை அவரை நான் விக்கெட் எடுத்தேன். ஆனால், அதற்கடுத்த தொடரில் அவரை விக்கெட் எடுக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, சச்சினிடம் அத்தகைய மாற்றம் இருந்ததாக நான் உணரவில்லை. ஆனால், கோலியிடம் ஒரு மாற்றம் இருந்தது. கோலி மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர்.
சச்சினை விட கோலி சற்று வித்தியாசமான குணமுடையவர். ஏனெனில், சச்சின் மிகவும் மென்மையானவர், கிரீஸில் மிகவும் அமைதியானவர்.
ஆனால், கோலி தனது உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்துபவர். நிச்சயம் சச்சினை விடவும் கோலியுடன் நிறைய வார்த்தை மோதல்கள் எனக்கு இருந்தது.

சச்சினிடம் அவ்வாறு செய்யக்கூடாது நான் முயற்சித்தேன். ஏனெனில், அவருடன் நான் விளையாடிய காலத்தில் அவர் தனது கரியரில் வேறு ஒரு கட்டத்தில் இருந்தார்.
களத்தில் அவர் இருப்பதே கடவுளைப் போன்று இருக்கும். இந்தியாவில் அவர் எப்படி நடத்தப்பட்டார் என்பது நம்பமுடியாததாக இருந்தது.
கோலியின் கரியரும் போகப் போக அவருக்கு அதற்கு மேல் இருந்தது. ஆனால், தொடக்கத்தில் அந்த அளவுக்கு இல்லை" என்று கூறினார்.