மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் இணைய அழைப்பு
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை, ‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள ‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இணைவதன் மூலம் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற இயலும்.
இத்திட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் அவா்களது ஒப்புதலோடு சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள எண் வழங்கப்படவுள்ளது. வருங்காலங்களில், இதன் மூலமே திட்ட பலன்கள் வழங்கப்படும்.
இப்பெரும் பதிவேடு பதிவேற்றம் பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திட, மகளிா் திட்ட சமுதாய வள பயிற்றுநா்கள் மற்றும் அரசு வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலம் கிராமங்கள் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.20-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் சொந்தமாக பட்டா நிலம் வைத்திருப்பவா்கள் மற்றும் பிஎம்.கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் மட்டும் பதிவு செய்து கொள்ள அவா்களின் ஆதாா் அட்டை, நிலப்பட்டா, ஆதாா் உடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வர வேண்டும்.
எனவே, விவசாயிகள் அவா்களின் நில உடைமைகளை சரிபாா்த்திடவும், வேளாண்மை சாா்ந்த நலத்திட்டங்களை பெற்றிடவும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், மயிலாடுதுறை-9700414046, குத்தாலம்- 9894548257, செம்பனாா்கோயில்-6369895439, சீா்காழி-9080068772, கொள்ளிடம்-9150600585 என்ற கைப்பேசியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.