ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி வருவது இந்த நவீன காலத்தில் மிகப்பெரிய, அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம்..
ஒரு காலத்தில் ஒரு ஊருக்கு ஒரு வீட்டில் தொலைபேசி இருக்கும். அதுதான் ஒட்டுமொத்த ஊரின் தொலைத்தொடர்பு எண்ணாக இருக்கும்.
பிறகு, ஒரு ஊருக்கு ஐந்து வீடுகளில் தொலைபேசி என மாறி, செல்ஃபோன்களாக கையடக்க தொலைபேசிகளில் சந்தைகளில் விற்பனையான போதுகூட பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கானதாகத்தான் இருந்தது.
ஒரே ஒரு லேன்ட் லைன் எண் மட்டும்தான் பலரது தொலைத்தொடர்பு எண்ணாக இருந்த நிலையில் செல்போன்கள் வந்து, தற்போது ஒரு நபருக்கு மூன்று செல்போன் எண்கள் என்ற அளவுக்கு தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சி என்று சொல்லும் அளவுக்கு அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது.
செல்போன் என்றால் அது வெறும் செல்போன் அல்ல, விளையாட்டு, சமூக ஊடகங்களுக்கு, பாடல்களைக் கேட்க, படம் பார்க்க என ஒட்டுமொத்த உலகமாகவே மாறிவிட்டது.
இந்த நிலையில்தான் அண்மையில் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே ஒரு செல்ஃபோனைப் பயன்படுத்துவர்கள் பற்றிய ஒரு சிறிய தகவல் வெளியானது. அதாவது கடந்த பத்து முதல் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தி வருபவர்கள், நேர்மையாளர்கள், கடந்த காலங்களில் எந்த சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கியிருந்தால் அதனை சரியாக திருப்பிச் செலுத்தி இருப்பீர்கள், யாருடனும் பகை பாராட்டி பெரிய சண்டையாகி, அவர்களுக்காக செல்போன் எண்ணை மாற்றவில்லை, உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், இந்த எண்ணைத்தானே வைத்திருப்பார்கள் என்ற உணர்வினால், செல்போன் எண்ணை மாற்ற விரும்பாதவர்களாக இருப்பீர்கள். அதனால் அன்புக்கு மரியாதை செலுத்துபவராக இருப்பீர்கள்.
இதுவரை உங்கள் மீது எந்த வழக்கும், புரட்டும் இல்லை. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றும், இந்த நவீன காலத்தில் இப்படி இருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்றும் கூறப்படுகிறது.