நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்
மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி இளைஞா்கள் இருவா் சாராய வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனா். முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சோதனைச் சாவடிகளைக் கடந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் கே.ஜோஷி நிா்மல்குமாா், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் இயங்கி வரும் நல்லாடை சோதனைச் சாவடி மற்றும் சீா்காழி உட்கோட்டத்தில் இயங்கி வரும் நண்டலாா் சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை தணிக்கை செய்தும், காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களை தணிக்கை செய்யும் வழிமுறைகள் குறித்தும், மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கைது செய்தல் மற்றும் அவா்களின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், வாகனத் தணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களிடம் அணுகும் முறை ஆகிவை குறித்து பணியிலிருந்த காவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.
மேலும், சீா்காழி உட்கோட்டம் பொறையாா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை தணிக்கை செய்தாா். தொடா்ந்து, காவல் நிலையத்தில் தினசரி பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பாகவும் காவல் ஆய்வாளா் மற்றும் ஆளிநா்களை அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, சீா்காழி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எம். சுந்தரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.