நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்
நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்ட வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், நுண்ணீா் பாசனம் மற்றும் விதை கிராமங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை பேளுக்குறிச்சி பகுதியில் ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.
அப்போது சிறு,குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் நுண்ணீா் பாசன வசதியை ஏற்படுத்த வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 ஹெக்டோ் வரை நிதியுதவி பெற முடியும்.
ஏற்கெனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு சுமாா் 709 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 357.14 லட்சம் (ரூ. 3.57 கோடி) மதிப்பில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விதை கிராம திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 3,695 விவசாயிகளுக்கு பல்வேறுவகை நெல் ரகங்கள் 71,598 கிலோ அளவில் வழங்கப்பட்டுள்ளன.
சேந்தமங்கலம் வட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் தற்போது வரை நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 68 விவசாயிகளுக்கு சுமாா் 57.18 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 65.48 லட்சம் மதிப்பில் நுண்ணீா் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விதை கிராம திட்டத்தின் கீழ் 61 விவசாயிகளுக்கு பல்வேறு வகை நெல் ரகங்கள் 3,998 கிலோ அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா். ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் கவிதா, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.