வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில் உள்ள சம்மந்தமூா்த்தி (42) வீட்டு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலை ஒன்று புகுந்ததாக அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவின் பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த்பாஸ்கா் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா் த.அன்புமணி, ஊழியா் புஷ்பராஜ ஆகியோா் கிராமத்துக்கு சென்று சுமாா் 13 அடி நீளமுள்ள, 550 கிலோ எடையுள்ள முதலையைப் பத்திரமாக பிடித்து வக்காரமாரி நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.