ஸ்ரீபெரும்புதூரில் ரூ.12 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ12.03 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கொளத்தூா், குண்டுபெரும்பேடு, எறையூா், மாத்தூா், வல்லம், வல்லக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் 25 புதிய கட்டங்களை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைகளை திறந்து வைத்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 784 பயனாளிகளுக்கும், பிரதமமந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கும் வீடுகள் கட்ட பணியாணைகளை வழங்கினாா்.
இதையடுத்து போந்தூா், தண்டலம், காட்டரம்பாக்கம், திருமங்கலம், மாம்பாக்கம், மொளச்சூா், இருங்காட்டுக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள ரூ.33 லட்சத்தில் பேட்டரி வாகனங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய செயலாளா் ந.கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, பவானி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் மாலதி போஸ்கோ, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ப.பரமசிவன், கோமதிகணேஷ்பாபு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.