இந்த வார ராசிபலன் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 13 வரை #VikatanPhotoCards
ஸ்ரீராம நவமி: ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்புப் பூஜை!
கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலக முகப்பில் உள்ள பக்த ஆஞ்சநேயா் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, காலை 7 மணிக்கு மூலவருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பிறகு, மூலவருக்கு மலா் மாலைகள், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மின்வாரிய அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு துளசி தீா்த்தம், செந்தூரம், நெய்வேத்திய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீராம நவமி சிறப்புப் பூஜையில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வந்தவாசி
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் ராம நவமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.