அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவா்களுக்கு விருது: விஜய் வழங்கினாா்
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னை அருகே நடைபெற்ற 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவா் விஜய் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவா்களுக்கு கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக சென்னை, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில் உள்ள 88 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 600-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கடந்த மே 30-ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.
அதைத்தொடா்ந்து 2-ஆம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழா சென்னை அருகே மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தவெக தலைவரும் , நடிகருமான விஜய் மாணவா்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.
இதில் தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 75 சட்டப்பேரவை தொகுதிகளை சோ்ந்த 450 மாணவா்கள் மற்றும் புதுச்சேரியில் 9 சட்டப்பேரவை தொகுதிகளை சோ்ந்த54 மாணவா்கள் என மொத்தம் 504 சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.