அதிமுகவை எதிர்க்காதது ஏன்? தவெக விளக்கம்!
அதிமுகவை எதிர்க்காதது ஏன் என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டனர் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேர்தல் மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “70 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டவர்களாக திமுக இருக்கிறது. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இளைஞர்களைக் கொண்டவர்களாக தவெக இருக்கிறது.
அண்ணா, திமுகவை ஆரம்பிக்கும்போது முற்றிலும் இளைஞர்களைக் கொண்டவர்களாக இருந்தது. அதைப் போலவே தற்போது தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. ஆனால் நம்மைப் பார்த்து திமுக கேள்வி கேட்கிறது.
பேசிப் பேசி வளர்ந்த திமுகவிற்கு, இன்றைக்கு பேச ஆள் இல்லை. அதனால்தான், திமுக ஐஏஎஸ் அதிகாரிகளை பேச பயன்படுத்துகிறது.
ஆட்சி அதிகாரத்திற்கு வராத தவெக-ஐ பார்த்து ஏகப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள். ஆனால், திமுகவை பார்த்து எந்த கேள்விகளும் கேட்கப்படுவதில்லை.
தீயசக்தியாக ஒரே குடும்பம் ஆண்டு கொண்டிருந்ததை எதிர்த்து அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதே உணர்வுடன், விஜய் தவெக உருவாக்கியுள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா மோடியா? லேடியா? என குரல் எழுப்பிய நிலை இன்று இல்லை. இன்றைக்கு பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டு, இன்றைக்கு அந்தக் கூட்டணிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை.
நாங்கள் ஏன் அதிமுகவை எதிர்க்கவில்லை என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டார்கள் என்பதால்தான்.
எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால் யாராலும் வெற்றி பெற முடியாது” என்றார்.