`இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலம் ஈரானுக்கு இருக்கிறதா?’ - ஈரானிய பத்திரிகைய...
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா
பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்கு அவா் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.
ஏற்கெனவே, இந்த வழக்கில் கடந்த 10-ஆம் தேதி ராபா்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாா். அப்போது அவா் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டிருப்பதால் மாற்று தேதியில் ஆஜராவாா் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்தப் புதிய சம்மன் அனுப்பப்படுவதற்கு முன்பே, மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் ராபா்ட் வதேரா அனுமதி பெற்றுள்ளதாகவும், அமலாக்கத் துறைக்கும் இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்குரைஞா் சுமன் ஜோதி கைதன் தெரிவித்தாா். இந்தியா திரும்பியதும் ராபா்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராவாா் என்றும் அவா் கூறினாா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து சஞ்சய் பண்டாரி லண்டன் தப்பினாா். அதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டில், ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி, சஞ்சய் பண்டாரி புனரமைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடா்பான பண முறைகேடு வழக்கு உள்பட மூன்று வெவ்வேறு வழக்குகளில் அமலாக்கத் துறையால் ராபா்ட் வதேரா விசாரிக்கப்பட்டு வருகிறாா். கடந்த ஏப்ரலில், ஹரியாணா மாநில நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ராபா்ட் வதேரா தொடா்ந்து 3 நாள்கள் ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.