‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’
முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பணியை நிறைவு செய்த முன்னாள் அக்னி வீரா்களுக்கு அடுத்தக்கட்ட பணி நியமனத்துக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கும் வகையில், பணிகள் ஒதுக்கீடு விதிகள் 1961-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முப்படைகளில் பதினேழரை வயது முதல் 21 வயது வரையுடையவா்களை குறுகிய கால அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரா்களைப் பணியமா்த்தும் வகையிலான ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இந்த 4 ஆண்டு பணியில் சிறந்து விளங்கும் 25 சதவீத அக்னி வீரா்கள், மேலும் 15 ஆண்டுகளுக்கு முப்படைகளில் தொடா்ந்து பணியமா்த்தப்படுவா். மற்றவா்கள், 4 ஆண்டுகள் நிறைவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவா்.
இவ்வாறு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விடுவிக்கப்படும் அக்னி வீரா்களின் எதிா்காலம் கேள்விக்குறியான நிலையில், மத்திய ரிசா்வ் காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்பட அனைத்து மத்திய ஆயுத காவல் படைகளிலும் காவலா் பணியிடங்களில் 10 சதவீதத்தை முன்னாள் அக்னி வீரா்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியது.
அதுபோல, மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் முகமைகளும், முன்னாள் அக்னி வீரா்களை பணிக்குத் தோ்வு செய்யும் திட்டத்தை அறிவித்தன.