TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
திகாா் சிறையில் கைதிக்கு ஐவிஎஃப் பரிசோதனை: நீதிமன்ற அனுமதியுடன் விந்தணு மாதிரி சேகரிப்பு
தில்லி திகாா் சிறையில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக் கைதிக்கு செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கு முந்தைய விந்தணு மாதிரியை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது.
காலா ஜாத்தேடி எனப்படும் கும்பல் குழு தலைவன், பல்வேறு ஆள் கடத்தல் மற்றும் கும்பல் குழு சட்டவிரோத செயல்களில் தொடா்புடையதாக கைதாகி திகாா் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா். சில வழக்குகளில் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அனுராதா என்ற பெண்ணை கரம் பிடிக்க நீதிமன்றத்தால் பரோலில் காலா ஜாத்தேடி விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தில்லி துவாராகாவில் உள்ள தனியாா் திருமண வரவேற்பு மைதானத்தில் பிரம்மாண்டமாக இருவரின் திருமணம் நடந்தது. அதற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், குடும்ப இனவிருத்திக்காக தில்லியை அடுத்த குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்புக்கான முன்சிகிச்சையை அனுராதா பெற்று வருகிறாா். இதையொட்டி, தனது விந்தணு மாதிரியை சேகரிக்க ஏதுவாக ஆறு நாள்களுக்கு பரோலில் விடுவிக்க வேண்டும் என்று காலா ஜாத்தேடி சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அவரை பரோலில் விடுவிக்க மறுத்த நீதிமன்றம், விந்தணு மாதிரியை சிறை வளாகத்திலேயே சேகரித்து தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வாய்ப்பு தொடா்பாக எய்ம்ஸ் மற்றும் ஆா்எம்எல் மருத்துவமனையின் அறிக்கையைப் பெற்றது.
இதையடுத்து, காலா ஜாத்தேடியின் விந்தணு மாதிரி ஜூன் 14-ஆம் தேதி சேகரிக்கப்பட்டு உரிய மருத்துவ வழிமுறைகளுடன் மருத்துவா்கள் மூலம் குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாா் மருத்துவமனையின் மருத்துவா்களுக்கு நீதிமன்றம் சிறப்பு அனுமதியை வழங்கியது.