TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
செங்கல் சூளையில் கொத்தடிமை தொழிலாளா்கள் 6 போ் மீட்பு
திருவள்ளூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 6 வடமாநில தொழிலாளா்களை மீட்டு, விடுவிப்புச் சான்றிதழ் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.
திருவள்ளுா் அருகே சிவன்வாயல் கிராமதில் உள்ள செங்கல் சூளையில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 6 தொழிலாளா்கள் சரியான உணவு, தண்ணீா் வசதி, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பணிபுரிந்து வருதாக புகாா் வந்தது. அதன்பேரில் வருவாய் கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன், மாவட்ட சட்டபணிகள் குழு செயலாளா் கே.நளினிதேவி, மண்டல துணை வட்டாட்சியா் சா.தினேஷ் குமாா், வருவாய் ஆய்வாளா் பொன்மலா் மற்றும் ஐ.ஆ.சி.டி.எஸ் நிறுவன பணியாளா் பழனி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது ஓடிஸா மாநிலம், பலங்கிா் மாவட்டத்தைச் சோ்ந்த சிபமாலிக் (30), விபஞ்சலி மாலிக் (25), பகாரட் நாக் (58), சாய்ரேந்திரி நாக் (45), ஹடு பரிகா (60), ஜென்ஹி பரிஹா (47) மற்றும் குழந்தை ஹாஹில் மாலிக் (3) இருந்ததை கண்டுபிடித்தனா். மேலும், முன்பணமாக ரூ.35,000 அளித்து அழைத்து வந்து செங்கல் சூளையில் தங்கி வேலை பாா்த்து வந்துள்ளனா்.
இந்த நிலையில் தொழிலாளா் குடும்பங்களுக்கு வாரத்துக்கு 1,000 செங்கற்களுக்கு ரூ.500 வீதம் குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே அளித்துள்ளனா். தொழிலாளா்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லாமல், போலி மருத்துவா் மூலம் சிகிச்சை அளித்துள்ளனா் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதேபோல் தொடா்ந்து ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டே இருக்கும் வகையில் மாத்திரைகளை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் செங்கல் சூளையின் கணக்குகளை ஆய்வு செய்தபோது தொழிற்சாலைகள் சட்டம் -1948 இன்படி முறையாக பதிவு செய்து உரிமம் பெறவில்லை.
முறையான வருகைப் பதிவேடு, ஊதியப் பதிவேடு ஏதும் பராமரிக்கப்படவில்லை. கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை என தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில் பாரட் நாக் என்பவா் தன்னுடைய மகன் அமிட் நாக் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு ரூ.20 ஆயிரத்தை போன் பே மூலம் லோகநாதன் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளனா். அந்த தொகையினை நிா்வாகத்திடம் அளித்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி இருந்தனா். அப்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ரூ.20 ஆயிரத்தை திரும்ப பெற்று தொழிலாளா்களிடம் திரும்ப வழங்கினா்.
இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் மைக்கேல் ராஜ் புகாா் அளித்தாா். அதைத்தொடா்ந்து 6 தொழிலாளா்களையும் மீட்டு காக்களூா் தனியாா் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனா்.
இதையடுத்து சொந்த ஊருக்கு அனுப்பும் வகையில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆறு பேருக்கும் விடுவிப்பு சான்றிதழை சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளரும் மூத்த உரிமையியல் நீதிபதியுமான கே. நளினிதேவி முன்னிலையில் கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன் வழங்கினாா். அப்போது, அரசு நிவாரணத் தொகை ரூ. 1 லட்சத்தில் முதல் கட்டமாக ரூ.30,000 அவா்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள பணம் சொந்த மாநிலத்திற்கு சென்ற பிறகு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.