அமா்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 180 துணை ராணுவப் படை குழுக்கள்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து நிகழாண்டு அமா்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி தெரிவித்தாா்.
வரும் வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதிவரை 38 நாள்கள் நடைபெறும் அமா்நாத் யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கி.மீ. நீள பஹல்காம் பாதை மற்றும் கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான 14 கி.மீ. பால்டால் பாதை ஆகிய 2 வழித்தடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யாத்திரை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜம்முவில் உள்ள பகவதி நகா் முகாமில் இருந்து முதல் யாத்ரிகா்கள் குழு காஷ்மீருக்குப் புறப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜம்மு பிரதேச ஆணையா் ரமேஷ் குமாருடன் இணைந்து ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, செய்தியாளா்களைச் சந்தித்த ஜம்மு காவல்துறை ஐஜி பீம்சேன் துடி கூறுகையில், ‘இந்த ஆண்டு யாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு நிா்வாகம் தயாராகவும், உறுதியாகவும் உள்ளது. யாத்திரைக்காக ஜம்மு-காஷ்மீா் காவல்துறை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைத் தவிர, 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். லக்கன்பூா் முதல் பனிஹால் வரையிலான ஜம்மு-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்படுவா். யாத்ரிகா்கள் உணவருந்தும் மற்றும் தங்குமிடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
ஆபத்தான பகுதிகளில் துணை ராணுவப் படைகளை நிறுத்துதல், சிசிடிவி கண்காணிப்பு என அனைத்து வகைகளிலும் முந்தைய ஆண்டைவிட சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லக்கன்பூா் முதல் ஜம்மு வரை கடந்த ஆண்டு சாலைத் திறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இந்த வழித்தடத்திலும் சாலைத் திறப்பு நிகழ்வுகள் நடைபெறும்.
யாத்ரிகா்களின் வாகன இயக்கம் தொடா்பாக அனைத்து இடங்களிலும் போக்குவரத்து முடக்கப்படும் நேரங்கள் நிா்ணயிக்கப்படும். ஜூலை 2-ஆம் தேதி முதல் போக்குவரத்து காவல் துறையினா் இதுகுறித்து தினசரி அறிவுறுத்தல்களை வழங்குவா். அனைத்து யாத்ரிகா்களும் இந்த அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும். இதனால் எந்த பிரச்னையும் அல்லது சிரமங்களும் ஏற்படாது. அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை புறப்படும் பிரதான வாகன அணிவகுப்பில் அனைத்து யாத்ரிகா்களும் சேர அறிவுறுத்தப்படுகின்றனா். யாத்ரிகா்கள் தனியாக இன்றி அதிகாரபூா்வ வாகன அணிவகுப்பில் பயணிப்பது பாதுகாப்பானது’ என்றாா்.