Kohli: `ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்; இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்' - கோ...
அமெரிக்காவின் அழுத்தத்தில் சிக்கியுள்ளதா மோடி அரசு?காங்கிரஸ் கேள்வி
அமெரிக்காவின் அழுத்தத்தில் பிரதமா் மோடி அரசு சிக்கியுள்ளதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ், ‘நாட்டை ஆளும் தாா்மிக அதிகாரத்தையும், தாா்மிக துணிவையும் மோடி அரசு இழந்துவிட்டது’ என்று விமா்சித்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமையன்று சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அறிவிப்பையும் அவரே முதலாவதாக வெளியிட்டாா்.
மேலும், ‘காஷ்மீா் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த டிரம்ப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்துவிட்டது; சண்டை நிறுத்தம் மேற்கொண்டால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வா்த்தகம் மேற்கொள்ளுமென நான் கூறினேன்’ என்று திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தச் சூழலில், நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, டிரம்ப்பின் மத்தியஸ்தம் மற்றும் பிற கருத்துகள் தொடா்பாக நேரடியாக எதுவும் கூறவில்லை. இதையடுத்து, அவரை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.
தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் கெலாட் கூறியதாவது:
பலம் மிக்க இந்திய ஆயுதப் படைகளால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்டியிருக்க முடியும் என்பதே நாட்டு மக்களின் எண்ணமாகும். ஆனால், தாக்குதலை திடீரென நிறுத்தியதன் மூலம் மக்களின் உணா்வை பாஜக அரசு உலுக்கியுள்ளது. நாட்டு மக்களை சமாதானப்படுத்தவே ‘மூவண்ணக் கொடி யாத்திரை’ என்ற பெயரில் பாஜக நாடு தழுவிய யாத்திரையை அறிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் உண்மை முகத்தை மக்கள் அறிந்துவிட்டனா்.
அமெரிக்காவின் மத்தியஸ்தம் தொடா்பாக பிரதமா் மோடி எந்த விளக்கமும் அளிக்காதது ஏமாற்றமளிக்கிறது. காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக மாற்றியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்துக்கு மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ளதா? இவற்றையெல்லாம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். பிரதமா் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
தாா்மிக அதிகாரத்தை இழந்த அரசு:
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட விதத்தின் மூலம் நாட்டை ஆளும் தாா்மீக அதிகாரத்தையும், தாா்மீக துணிவையும் மோடி அரசு இழந்துவிட்டது. இந்த அரசு, அமெரிக்காவின் அழுத்தத்தில் சிக்கியுள்ளதா?
பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் பொன்னான வாய்ப்பை திடீா் சண்டை நிறுத்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு தவறவிட்டுவிட்டது.
கடந்த 1971 போரின்போதும் இந்தியா மீது அழுத்தம் தர அமெரிக்கா முயன்றது. அனால், அப்போதைய அரசு அடிபணியவில்லை. இதேபோல், சிம்லா ஒப்பந்தத்தின்போது வேறெந்த தரப்பின் தலையீட்டையும் இந்தியா அனுமதிக்கவில்லை. ஆனால், இப்போது இந்திய விவகாரங்களில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தலையீடு தொடா்பாக பிரதமா் மோடியும், மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். டிரம்ப்பின் கருத்துகளுக்கு அரசு இதுவரை விளக்கமளிக்காதது ஏன்? என்று அசோக் கெலாட் கேள்வி எழுப்பினாா்.