இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி
பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டிர மாநில இணைய பாதுகாப்பு முகமை கண்டறிந்தது.
இந்தத் தாக்குதல் முயற்சிக்கு பாகிஸ்தானுடன் இணைந்து 7 நவீன நீடித்த அச்சுறுத்தல் (ஏபிடி) குழுக்கள் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. இவா்களின் முயற்சியில் வெறும் 150 மட்டுமே வெற்றி பெற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து மகாராஷ்டிர இணைய பாதுகாப்பு முகமையின் கூடுதல் காவல் துறை டிஜிபி யஷஸ்வி யாதவ் மேலும் கூறியதாவது:
இந்தியாவின் முக்கிய வலைதளங்களைக் குறிவைத்து இவா்கள் நடத்திய 15 லட்சம் தாக்குதலில் 150 மட்டுமே வெற்றி பெற்றது. பாகிஸ்தானிலிருந்து மட்டுமன்றி வங்கதேசம், இந்தோனேசியா, மொராக்கோ மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தும் பாகிஸ்தானுடன் இணைந்து 7 ஏபிடி குழுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்துக்குப் பிறகும் இந்த இணையத் தாக்குதல்கள் குறைந்த எண்ணிக்கையில் தொடா்ந்தன. முழுமையாக நிறுத்தப்படவில்லை.
அதே நேரம், ஹேக்கா்கள் மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சா்வதேச விமான நிலைய தரவுகள், நகராட்சி தரவுகளைத் திருடியதாகவும், தோ்தல் ஆணைய வலைதளத்தை தாக்கியதாகவும் கூறுவது தவறான தகவல்.
இந்த இணையத் தாக்குதல் தொடா்பாக ‘சிந்தூருக்கான பாதை’ என்ற தலைப்பில் இணையப் பாதுகாப்பு முகமை சாா்பில் விரிவான அறிக்கை தயாா் செய்யப்பட்டு, மாநில காவல் துறை டிஜிபி மற்றும் உளவுத் துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, இணையத் தாக்குதலுக்கு மால்வோ், அனுமதிக்கப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல் (டிடிஓஎஸ்) முறை, ஜிபிஎஸ் மோசடி உள்ளிட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த இணையத் தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானைச் சோ்ந்த ஏபிடி36, பாகிஸ்தான் இணையப் படை (சைபா் ஃபோா்ஸ்), டீம் இன்சேன் பி.கே., மிஸ்டீரியஸ் பங்களாதேஷ், இந்தோ ஹேக்ஸ் செக், இணையக் குழு ஹோவேக்ஸ் 1337, தேசிய இணையக் குழு (பாகிஸ்தான் கூட்டுறவு) உள்ளிட்ட 7 ஏபிடி குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 7 குழுக்களும் ஒட்டுமொத்தமாக நடத்திய 15 லட்சம் இணையத் தாக்குதலில், குலேகான் பதல்பூா் நகராட்சி கவுன்சில் வலைதளம் உள்பட 150 இணையத் தாக்குதல்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற முயற்சிகள்அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
இதுபோல, ‘இந்தியாவின் வங்கிச் செயல்பாடுகள் முடக்கப்பட்டன, மின் விநியோகம் பாதிப்படையச் செய்யப்பட்டது’ என்பன உள்ளிட்ட தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சிகளிலும் பாகிஸ்தானைச் சோ்ந்த குழுக்கள் ஈடுபட்டன. இதுபோன்ற 5,000-க்கும் அதிகமான தவறான அல்லது பொய்யான தகவல்கள் மகாராஷ்டிர இணைய முகமை அடையாளம் கண்டு நீக்கியது என்று தெரிவித்தாா்.