"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறு...
அமெரிக்கா முதன்முதலாகப் பயன்படுத்திய பங்கர் பஸ்டர்! பெயரிலேயே பயம் காட்டும் குண்டுகள்!
ஈரானில் உள்ள அணு ஆயுத உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் பங்கர் பஸ்டர்தான் இன்றைய பேசுபொருள். பெயரிலிருந்தே இந்த குண்டுகள் பூமியைக் குடைந்துசென்று தாக்கும் என்பது தெளிவாகிறது.
ஈரான் அணு ஆயுத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்திருந்தது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பத்து நாள்களுக்கும் மேல் நீடித்துவரும் நிலையில், இதில் அமெரிக்காவும் தலையிட்டிருப்பது நிலைமையை தீவிரமடையச் செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் பலத்த தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவும் நேரடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானில் தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக ஜிபியு-57 ஏ/பி என்றழைக்கப்படும் பங்கர் பஸ்டர் குண்டுகள் என்பது உலகிலேயே அணு ஆயுதமற்ற, மிக சக்திவாய்ந்த குண்டுகளாகக் கருதப்படுகின்றன.
“ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைகளில் முதல்கட்டமாக ஈரானில் ஃபார்டவ், நடன்ஸ், இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளவாடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 30 ஆயிரம் பவுண்டு எடைகொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது. ஃபார்டவ் பகுதியில் இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் பல வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசௌரி விமானப் படைத் ஏவுதளத்தில் இருந்து இந்த குண்டுகளுடன் பறந்த ஏழு பி-2 போர் விமானங்களும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசிவிட்டு பாதுகாப்பாக மீண்டும் ஏவுதளத்தில் தரையிறங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுகள் 2,400 கிலோ கிராம் எடைகொண்ட வெடிபொருள்களுடன் பூமியைத் துளைத்துக்கொண்டு சென்று தரைக்குள் புதைந்திருக்கும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். இது முதலில், தரையைத் துளைத்தபிறகே வெடித்துச் சிதறும் வல்லமை பெற்றது.
ஈரான், எதிரி நாடுகளிலிருந்து எந்த அபாயமும் ஏற்படக் கூடாது என்பதற்காக,மலையைக் குடைந்து அதற்குள் அணு மையங்களை உருவாக்கி வைத்துள்ளது. இந்த மலை மீதுதான் அமெரிக்கா பங்கர் பஸ்டர்களை வீசியிருக்கிறது. பொதுவாக உலக நாடுகள், தங்களது மிக முக்கிய பாதுகாப்புத் தளவாட அமைப்புகளை பூமிக்கடியிலோ அல்லது மலையைக் குடைந்தோ அமைத்துவிடும். அப்படிப்பட்ட இடங்களை சிதறடிக்கவே, அமெரிக்க பங்கர் பஸ்டர் என்ற பாகுபலி குண்டுகளைத் தயாரித்து வைத்திருந்தது.
முதன் முதலாக ஈரான் மீதுதான், அமெரிக்கா இந்த வகை குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது. இந்த குண்டுகள் ஒரு தரைப்பகுதியில் விழுந்தால் அங்கிருந்து 200 அடி (60 மீட்டர்கள்) ஆழம் வரை குடைந்துசென்று தாக்கும் திறன்பெற்றது பங்கர் பஸ்டர் குண்டுகள். அதுவே கான்கிரீட் தளமாக இருந்தால் பங்கர் பஸ்டர்கள் 60 அடி ஆழம் வரை சென்று தாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம், ஈரானின் அணு மையங்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.