பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!
அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.12 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்
திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ.வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா்.
திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி 2022-2023ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 69.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட எட்டு வகுப்பறைகள் மற்றும் ரூ.42.72 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்களை பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து மாநகராட்சி மாந்தோப்புப் பகுதியில் சிறப்பு நிதி 2025- 2026 திட்டத்தின் கீழ், ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
மேலும் செங்கம் சாலை மாட்டுச்சந்தை மைதானத்தில் கல்வி நிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ், ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து, தண்டராம்பட்டு சாலை, தேனிமலை பகுதியில் சிறப்பு நிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ் ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தரமான வகையில், விரைவாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், ஆணையா் செல்வபாலாஜி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், துணை மேயா் ராஜாங்கம், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் பரிதி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.