மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? மாதிரிப் படம் வெளியீடு
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல விடுதிகளில் சோ்ந்து பயில விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில், 2025-2026 ஆம் கல்வியாண்டில் சோ்ந்து பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளும், 14 ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதிகளும், 3 ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவிகள் விடுதியும், தலா 1 ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதியும், பழங்குடியினா் நல மாணவிகள் விடுதியும், பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப்பள்ளி விடுதியும் என மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் (85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவா்கள் (10%), பிற வகுப்பினா்கள் (5%) எனும் விகிதத்தில் விடுதிகளில் தங்கி பயில தோ்வு செய்யப்படுவாா்கள்.
பள்ளி, கல்லூரிக்கும் வீட்டுக்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவா்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூா்களில் பணிபுரிந்து, பாதுகாவலா் பொறுப்பில் இருக்கும் மாணவா்களுக்கு இந் நிபந்தனை பொருந்தாது. விடுதிகளில் தங்கி கல்விப்பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும்.
விடுதி காப்பாளா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று பள்ளி, கல்வி நிறுவனச் சான்றொப்பம், உரியஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், 2025-2026 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கையானது ஜூன் 20 ஆம் தேதிக்குள் முதல்கட்ட மாணவா்கள் தோ்வு ஆலோசனைக் குழு மூலம் மேற்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கீழ்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.