ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழக இணை பேராசிரியா் அலி கான் மெஹ்மூதாபாதுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் பெண்களை அவமதிக்கும் வகையிலும் அவா் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாா். ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக விளக்கமளித்த கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் தொடா்பாக சா்ச்சை கருத்தை வெளியிட்டதற்காக அலி கானுக்கு மாநில மகளிா் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, அவா் தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்தாா்.
இந்நிலையில் அவரின் ஜாமீன் மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவா் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல் துறை ஐஜி தலைமையில் மூன்று நபா் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்; இதில் எஸ்.பி. நிலையிலான பெண் அதிகாரி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அலி கானை கைது செய்து, காவலில் வைத்தது தொடா்பாக ஹரியாணா மாநில காவல் துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஒரு வார காலத்துக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.