திருப்புமுனையாக அமைந்த திருமலை... மாஸ் ஹீரோவாக விஜய் எடுத்த ரிஸ்க்!
ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மைக்கு 1,800 பேர் பலி!
ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 2024-ம் ஆண்டு துவங்கியது முதல் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு 1,800-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையத்தின் உயர் அதிகாரி நகாஷி னுகோங்கோ கூறுகையில், கடந்த 2024-ம் ஆண்டு துவங்கியது முதல், 26 ஆப்பிரிக்க நாடுகளில் 1,48,308 குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், அதில் சுமார் 1,816 பேர் பலியானது பதிவாகியுள்ளதாகவும், கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின், சுகாதாரத் துறை ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 2,715 புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், 20 பேர் பலியானதும் தெரியவருகின்றது.
இந்தத் தொற்றினால், மேற்கு ஆப்பிரிக்க நாடான சியேரா லியோனிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்கவிலுள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சியேரா லியோனியில் மட்டும் சுமார் 40 சதவிகித பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை, தட்டம்மை, காலரா உள்ளிட்ட நோய்கள் வேகமாகப் பரவி வருவதை ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் 22 ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 1,57,974 காலரா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 5,998 பாதிப்புகள் உறுதியாகிய நிலையில் 3,273 பேர் பலியானதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:காஸாவில் ரியல் ஸ்குவிட் கேம்! உணவுக்காக உயிரிழக்கும் மக்கள்!