ஆற்றின் முகத்துவாரம் தோண்டுவதில் மோதல்! 40 கிராமவாசிகள் கைது!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரம் தோண்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு கிராமங்களுக்கிடையே வெடித்த மோதலினால் 40 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சம் மாவட்டத்தில் ராமாயப்பட்டணா மற்றும் கட்டூரூ ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த மார்ச்.10 அன்று ராமாயப்பட்டணா கிராமவாசிகள் அவர்களது படகுகள் எளிதாக கடலுக்குள் செல்வதற்காக, அப்பகுதியில் ஓடும் பஹுதா ஆறு கடலுடன் இணையும் பகுதியில் புதியதொரு முகத்துவாரம் தோண்டியுள்ளனர். இதற்காக, அங்குள்ள படலனா நீர்நிலையின் பகுதிகளையும் கட்டூரூ கிராமத்தின் எல்லைக்குட்பட்ட நிலத்தையும் அபகரித்து இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பெரும்பாலும் படலனாவை நம்பி மீனவத் தொழில் செய்து வரும் கட்டூரூ கிராமவாசிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த புதிய முகத்துவாரத்தை மீண்டு மண்ணால் மூடி புதைத்துள்ளனர். இதனால், இரு கிராமவாசிகளுக்கிடையே மோதல் வெடிக்கும் சூழல் நிலவியுள்ளது.
இதையும் படிக்க:நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி
இந்நிலையில், அக்கிராமங்களின் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறையினர் முன்னிலையில் இரண்டு கிராமவாசிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த கூட்டத்தில் இரண்டு கிராமவாசிகளும் ஒருவரையொருவர் கட்டைகளால் அடித்துக்கொண்டும், கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியும் தாக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில், 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட கட்டூரூ கிராமவாசிகள் 5 பேருக்கும், ராமாயப்பட்டணா கிராமவாசிகள் 10 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இந்த மோதல் சம்பவத்துக்கு காரணமான 40 பேரை கைது செய்துள்ளனர்.