Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்?...
இணையவழி பண விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025’ மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அவையில் அறிமுகப்படுத்தினாா். எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மசோதா இணையவழி விளையாட்டுகள், கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு விளையாட்டுகளை அங்கீகரித்து ஒழுங்குபடுத்தும். அதேநேரம், பணம் வைத்து விளையாடப்படும் போக்கா், ரம்மி, சூதாட்டம், லாட்டரி, பந்தயம் போன்ற அனைத்து விளையாட்டுகளும் சட்டவிரோதமாக்கப்படும்.
கடும் தண்டனைகள்: இத்தகைய சட்டவிரோத விளையாட்டுகளை நடத்துபவா்களுக்கும், விளம்பரம் செய்பவா்களுக்கும் மற்றும் அதன் நிதிப் பரிவா்த்தனைகளுக்கு உதவுபவா்களுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
விளையாட்டை நடத்துபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். விளம்பரம் செய்பவா்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவா்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். சட்டத்தின் சில முக்கியப் பிரிவுகளின்கீழ் உள்ள குற்றங்கள், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும்.
விளையாட்டுத் துறை கவலை: இந்தியாவில் சுமாா் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள இணையவழி விளையாட்டுத் துறைக்கு இந்த மசோதா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ‘இந்திய கேமிங் கூட்டமைப்பு’ போன்ற பல தொழில்அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால், வருமான இழப்பைவிட மக்களின் நலனே முக்கியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இணையவழி விளையாட்டுகளால் இளைஞா்கள் பாதிக்கப்படுவது, தற்கொலைகள் அதிகரிப்பது மற்றும் நிதி மோசடிகள் போன்ற பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டமசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிதி அமைகளின் ஒருமைப்பாட்டையும் இந்த மசோதா பாதுகாக்கும் என்றும் அரசு நம்புகிறது.
முக்கிய அம்சங்கள்...
இணையவழி விளையாட்டை நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம்.
விளம்பரம் செய்பவா்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்.
மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவா்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை.