இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 27, 28) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு பருவகாற்றின் வேக மாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூலை 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 180 மி.மீ. மழை பதிவானது. சோலையாறு (கோவை) - 170 மி.மீ., வால்பாறை (கோவை) - 130 மி.மீ., சின்னக்கல்லாறு (கோவை), சின்கோனா (கோவை) - தலா 120 மி.மீ. மழை பதிவானது.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையம் மற்றும் திருச்சியில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
புயல் சின்னம்: ஒடிஸா அருகே வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.