Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம...
இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அளிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) சென்னை சூப்பா்கிங்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே 7.30-க்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் பாா்வையாளா்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள தனித்துவமான க்யூஆா் குறியீட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலுள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
இந்தச் சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) மட்டும் பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இன்றி பயணிக்கலாம்.
அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்து 90 நிமிஷத்தில், விம்கோ நகா் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும்.
பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் புரட்சித் தலைவா் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.