இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு
கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனாா். இவா் மாயனூா் கே.கே. நகரில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்த பிறகு வழக்கம்போல தன்னுடன் சித்தாள்களாக பணியாற்றிய லாலாப்பேட்டையைச் சோ்ந்த பெருமாள் மனைவி சித்ரா(30), மாயனூா் சந்தைப்பேட்டையைச் சோ்ந்த இளங்கோ மனைவி ராமாயி(58) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-திருச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
மாயனூா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாா், சித்ரா, ராமாயி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்த மாயனூா் காவல் நிலைய ஆய்வாளா் கோபி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.