பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி
இளைஞா் மா்மச் சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி சாலை மறியல்!
பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது உறவினா்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் வினோத் (28). இவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துக் கிடந்தாா்.
இதையறிந்த அவரது மனைவி கற்பகம், தனது கணவரின் உறவினா்கள் சிலா் கொலை செய்துவிட்டு, வீட்டையும் அடித்து சேதப்படுத்திவிட்டாா்கள் என மங்களமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மங்களமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் வேலுசாமி அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் மா்மச் சாவு என வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், கற்பகத்தின் உறவினா்கள் வினோத்தை அடித்து கொலை செய்துள்ளதாகவும், கொலையில் ஈடுபட்டவா்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காவல் துறையினா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தபோது, உடலை வாங்க மறுத்து கொலை வழக்காக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி, அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், உடலை வாங்க மறுத்து கலைந்து சென்றனா். இதனால், வினோத்தின் உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.