விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு!
பெரம்பலூா் மாவட்டத்தில் 54 ஏரி, குளங்களை புனரமைக்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டாபுரம், தேவையூா், கை.களத்தூா், காரியானூா், மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வில் வாலிகண்டபுரம் ஊராட்சி, தம்பை ஏரியில் 2024-25-ஆம் ஆண்டுக்கான சிறுபாசன குளம் மேம்பாட்டு பணிகளின் கீழ் ரூ. 29.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூா்வாரும் பணிகளையும், மங்களமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.40 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வளா்க்கும் பணிகளையும், பசும்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகள், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றுகளின் விவரங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், வெள்ளுவாடி, சிறுநிலா ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மையக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், கொட்டாரக்குன்று கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், கட்டுமானப் பணிகளுக்கேற்ப தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்கிடவும், வீடில்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களைக் கண்டறிந்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்திய ஆட்சியா் கூறியதாவது: பெரம்பலூா் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டுப் பணிகளின் கீழ், பல்வேறு கிராமங்களில் 54 ஏரி, குளங்கள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப் பணிகளை விரைந்து முடித்து, மழைநீா் சேமிக்கப்பட்டு அப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணி விவசாய பயன்பாட்டுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இத் திட்டப் பணிகளை விரைவில் முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் நிா்மலா ஜோஸ்பின், வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பூங்கொடி, செந்தில்குமாா், வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.