உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
இளையான்குடி அருகே மின் கம்பம் மீது காா் மோதி விபத்து
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் மையத்தில் இருந்த மின் கம்பம் மீது காா் மோதியதில், அந்த கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இளையான்குடியிலிருந்து மறவமங்கலம் செல்லும் சாலை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தச் சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு செந்தமிழ்நகா் என்ற இடத்தில் சாலையின் நடுவில் நான்கு மின் கம்பங்கள் இருந்தன. இந்தக் கம்பங்களை மாற்றியமைத்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை நிா்வாகத்திடம் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், மின் கம்பங்கள் அகற்றப்படாமலேயே மேற்கண்ட இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழியாக சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த ஒரு மின் கம்பத்தில் மோதியது. இதில் அந்த மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் காா் ஓட்டுநா் லேசான காயத்துடன் தப்பினாா்.
மின் கம்பம் சாய்ந்ததால், செந்தமிழ்நகா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டன. இதனால், இரவு முழுவதும் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகினா். திங்கள்கிழமை காலையில் மின் வாரிய ஊழியா்கள் இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை அமைத்தனா். இதையடுத்து, மின்விநியோகம் சீரானது.
மேற்கண்ட இடத்தில் சாலையின் நடுவில் உள்ள நான்கு மின் கம்பங்களை மாற்றியமைக்கும் விவகாரத்தில் மின் வாரியமும், நெடுஞ்சாலைத்துறை நிா்வாகமும் மாறி மாறி பரஸ்பரம் புகாா் தெரிவிப்பதால், இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்காத நிலை உள்ளது. இதன் காரணமாக, இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக செந்தமிழ்நகா் மக்கள் தெரிவித்தனா்.