என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்
ஈரோடு: சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்!
சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த முதிய தம்பதி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான மூன்று பேரையும், முன்னதாக சிபிசிஐடி காவல்துறையினர் அனுமதி பெற்று விசாரணை நடத்தியிருந்தனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்பிருப்பதாக தெரிய வந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி, உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.
இத்துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் சென்னிமலை, பசுவப்பட்டியைச் சோ்ந்த நகை வியாபாரி ஞானசேகரனும் கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே, திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன்பாளையத்தில் வயதான தம்பதி தெய்வசிகாமணி, அலுமேலு, இவா்களின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவா்கள் மூவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக சிவகிரி இரட்டைக் கொலை மற்றும் திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினரும், சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு விசாரணை விரைவாக நடைபெறும் வகையில், இன்று இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.