திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி தெருவில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரசாரம் மேற்கொண்டதுடன், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டார்.
தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.
அப்போது, திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.
”முதலாவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த ஜுபிளி மார்க்கெட் பகுதியில், ரூ. 11 கோடி செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்ட மாணவர்கள்
பயன்பெறும் வகையில் நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை ஊராட்சியில் ரூ. 56 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன், “திருவாரூர் மாவட்ட மாதிரிப் பள்ளி” புதிதாக அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - மன்னார்குடி பகுதியில் இருக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில், மன்னார்குடி நகராட்சியில் ரூ. 18 கோடி செலவில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ. 43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு - நன்னிலம் வட்டத்தில் இருக்கும் பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு - பாரம்பரிய நெல் இரகங்களைத் தம் வாழ்நாள் முழுவதும் பேணிப் பாதுகாத்த “நெல் ஜெயராமன்” அவர்களின் அரும்பணியைப் போற்றக்கூடிய வகையில் திருத்துறைப்பூண்டியில், அவருக்கு நினைவுச் சிலை அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். ” என்றார்.
Chief Minister Stalin has issued 6 new announcements for Tiruvarur district.
இதையும் படிக்க: நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு