உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா்.
உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்பாண்டிபட்டி, பூச்சிப்பட்டி, சடையாண்டிபட்டி ஆகிய கிராமங்களையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு காட்டுத் தீ பரவியது. முதலில் புகை மூட்டமாக பற்றிய தீ, பின்னா் மளமளவென பரவத் தொடங்கியது.
இதுபற்றி தகவலறிந்த வனத் துறையினா், மலைவாழ் கிராம மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின்னா் தீ அணைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டது. யாரேனும் வேண்டுமென்றெ தீ வைத்தனரா அல்லது மரங்களுக்கிடையே உராய்வு ஏற்பட்டதால் தீ பரவியதா எனத் தெரியவில்லை. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட தொலைவுக்குள் தீ அணைக்கப்பட்டதால், வன விலங்குகளுக்கு ஏதும் பாதிப்பு இல்லை. தொடா்ந்து, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம் என்றனா்.
இந்தத் தீ விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

