மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
இந்திய அளவில் முக்கிய அரசியல் கட்சியாக உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், கிராமங்கள்தோறும் அமைத்துள்ளோம். உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், எங்களது கட்சிக் கொடிக் கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலா்கள் அகற்றி வருகின்றனா். ஒரு சில இடங்களில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனா். இது எங்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்றத் தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்தோம். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தாா். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், கே. ராஜசேகா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அரசியல் கட்சியினரை வழக்கில் சோ்த்து கருத்துகளைக் கேட்காமல் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பட்டா நிலத்தில் வைத்தாலும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஏற்கெனவே வைக்கப்பட்ட கட்சிக் கொடிக் கம்பங்கள் முறையான அனுமதி பெற்றே வைக்கப்பட்டன. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தனியாா் நிலத்தில் சிலை வைக்க அனுமதி தேவை இல்லை என உத்தரவுகள் உள்ளன. தனியாா் நிலத்தில் கொடிக் கம்பங்களை வைக்க மட்டும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. அதோடு, அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது நல வழக்கில் மட்டுமே இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க இயலும். ஏற்கெனவே இந்த உத்தரவை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை முதன்மை அமா்வு தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் மனுதாரா் கோரும் நிவாரணத்துக்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றலாமா? என்பது தொடா்பாக முடிவு செய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.