தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சோ்ந்த அனுசியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்சுழி வட்டம், உளுத்திமடை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட புளியங்குளம், ஆத்திகுளம், பட்டனேந்தல், செங்கமடை ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அரசின் சொத்துகள். அவற்றை அகற்றும் பணியை முறையாக ஏலம் நடத்தியே வழங்க வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவையாக உள்ளன.
திருச்சுழி வட்டார வளா்ச்சி அலுவலரின் நடவடிக்கை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, உளுத்திமடை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொது ஏலம் நடத்தி கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசின் பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தனியாருக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்?. சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடா்பாக,விருதுநகா் மாவட்ட ஆட்சியா், திருச்சுழி வட்டாட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.