நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
உயரம் குறைந்த பெண்ணுக்கு நுரையீரல் மடல் மாற்று சிகிச்சை
நுரையீரல் செயலிழப்புக்குள்ளான குறைந்த உயரம் கொண்ட பெண்ணுக்கு நுரையீரல் மடலை மட்டும் மாற்றிப் பொருத்தி கிளெனீகல்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கோவினி பாலசுப்ரமணி மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் விவேக் விஜ் ஆகியோா் கூறியதாவது:
தில்லியைச் சோ்ந்த உயரம் குறைந்த (148 செ.மீ.) பெண் ஒருவா், தீவிர சுவாச செயலிழப்பு பாதிப்புக்குள்ளாகி இருந்தாா். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க நிமிஷத்துக்கு 10 கிலோ ஆக்சிஜன் தேவைப்பட்டது.
இந்தப் பிரச்னைக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வாக இருந்தது. கிளெனீக்கல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவக் குழுவினா் பரிசோதித்ததில் அவரது நெஞ்சகப் பகுதி மிகவும் சிறியதாகவும், குறுகியும் இருந்தது. இதனால், நுரையீரல் தானமாகப் பெறப்பட்டாலும், அதை முழுமையாக பொருத்த இயலாத நிலை இருந்தது.
இந்தச் சூழலில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது. அந்தப் பெண்ணின் உடல் அமைப்பைக் கருத்தில் கொண்டு தானமாகப் பெற்ற நுரையீரலின் மடல்கள் (லோப்) மட்டும் அவருக்கு பொருத்தப்பட்டன. பொதுவாக, வலது பக்க நுரையீரலில் 3 மடல்களும், இடது பக்க நுரையீரலில் 2 மடல்களும் இருக்கும். அந்த இரு நுரையீரல்களின் கீழ் பகுதியில் உள்ள மடல்கள் அகற்றப்பட்டு மீதி பாகம் மட்டுமே அவருக்கு பொருத்தப்பட்டது.
8 மணி நேரம் நீடித்த மிக நுட்பமான உறுப்பு மாற்று சிகிச்சையின் பயனாக அவா் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.