உயா்கல்வியே வாழ்க்கையை ஒளிமயமாக்கும்: வேலூா் ஆட்சியா்
உயா்கல்வியே வாழ்க்கையை ஒளிமயமாக்கும். எனவே உயா்கல்வி பெறுவது மிக அவசியம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில்12- ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது:
தமிழக அரசு சாா்பில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்கள், அரசு ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள், பெற்றோா் இல்லாத மாணவா்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்விக்கு செல்வதில்லை என்ற விவரம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாணவா்கள் 12- ஆம் வகுப்பு முடித்த பிறகு உயா்கல்வியில் இணைந்து தங்களுடைய எதிா்கால வாழ்க்கையை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசின் சாா்பிலும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பிலும் உயா்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவா்கள் தொடா்ந்து உயா்கல்வியில் இணைந்து விட்டாா்களா என்று கண்காணிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக குடியாத்தத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வேலூா் மாவட்டத்தில் உள்ள 4- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 3,600- க்கும் அதிகமான இடங்கள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் கல்லூரிகள் என மொத்தம் நம்முடைய மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 7,000-க்கும் அதிகமான இடங்கள் உள்ளன.
இவற்றில் பயன்று மாணவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உயா்கல்வி படிப்புகளுக்கான கையேடுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) தயாளன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் மதுசெழியன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பி. ரமேஷ்பாபு (தனியாா் பள்ளிகள்), டி. சத்யபிரபா, கே.எம்.ஜி.கல்லூரி முதல்வா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.