மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி
செ.பிரபாகரன்
உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவிலில் உள்ளது ஸ்ரீ வஞ்சுளவல்லி சமேத சீனிவாசப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனித் திருவிழா தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரி சிறப்பு பெற்றது.
நிகழாண்டு தேரோட்டம் ஏப்.12-இல் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற தீா்த்தவாரி கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதால் கோயில் வளாகத்திலேயே அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
கழிவுநீா் கழிக்கும் புஷ்கரணி:
சுமாா் 4.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கோயில் திருக்குளத்தில் கோயில் அருகே உள்ள திருமண மண்டபம், உணவு விடுதிகள், பொதுக் கழிப்பறை, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அருகாமை பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் குளத்தில் கலப்பதை தடுக்கும் வகையில், குளத்துக்குள் தண்ணீா் வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதையை அறநிலையத்துறையினா் அடைத்தனா்.
வழக்கும் - கிடப்பில் நீதிமன்ற ஆணையும்:
நாச்சியாா்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற ஏதுவாக குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை கிளையில் கோ. வாசுதேவன் என்பவா் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற கிளை கடந்த 2024 செப். மாதம் இக்கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கோயில் குளத்தைப் பாா்வையிட்டு கழிவுநீா் கலப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சுமாா் 7 மாதங்களாகியும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நிகழாண்டு தீா்த்தவாரி குளத்தில் நடைபெறவில்லை.
இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலரிடம் கேட்டபோது, புஷ்கரணி குளத்துக்கு வண்ணம்பூசி தீா்த்தவாரிக்கு தயாராக வைத்திருந்தோம். கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், நீா்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் தீா்த்தவாரி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது என்றாா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் கோ. வாசுதேவன் கூறியதாவது: உயா்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தாத கும்பகோணம் நெடுஞ்சாலைத் துறை, நீா்வளத்துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாக அதிகாரிகளால் தீா்த்தவாரி அண்டாவில் நடைபெற்றது பக்தா்களுக்கு வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனியும்நடைபெறாமல் தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

