சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில், தமிழ்நாடு அரசு குறு குழும வளா்ச்சி திட்டத்தின்கீழ், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தில் ரூ. 7.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேராவூரணி கயிறு குழுமம், பொது வசதியாக்கல் மையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரிலிருந்து, காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு அரசின் குறு குழும வளா்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக அரசு மற்றும் சிறப்பு நோக்க குழு மற்றும் 21 தொழில் முனைவோா்கள் நிதி பங்களிப்புடன், 4 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மையத்தில், மதிப்பு கூட்டப்பட்ட தென்னை
நாா் பொருள்களான இரு பிரி கயிறு, சிப்பம் கட்டுதல் மற்றும் விதை வளா்ப்பு பைகளை உற்பத்தி செய்திடும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் நேரடியாக 200 நபா்களுக்கும், மறைமுகமாக 2000 நபா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ரெட்டவயல் கிராமத்தில் உள்ள பொது வசதியாக்கல் மையத்தில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். அசோக்குமாா் (பேராவூரணி), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோா் குத்துவிளக்கேற்றி, நவீன கயிறு பொருள்கள் உற்பத்தி இயந்திரங்களை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் சங்கா், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கு. விஜயகுமாா், கயிறு குழும தலைவா் வை. மணிசேகரன், இயக்குநா் மா.கணபதி, உறுப்பினா் கே.அப்துல் முத்தலிப் மற்றும் அரசு அலுவலா்கள், தொழில் முனைவோா்கள், தொழில் அதிபா்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.