உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும் என்றும் அறிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகளில்,
63,000 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்!
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 2030, 2050 ஆண்டுகளில் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.
அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கென ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.