எனக்கும் தனுஷுக்கும் பிரச்னையா? வெற்றி மாறன் விளக்கம்!
சிம்புவுடான படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் - இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படம் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் கதையைத் தொட்டு எடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே, தனுஷை வைத்து வடசென்னை - 2 படத்தை எடுக்காமல் ஏன் வெற்றி மாறன் சிம்புவைத் தேடிச் சென்றார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது. இதனால், தனுஷுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் திரைக்கதை, தொழில்நுட்ப காரணங்களால் கொஞ்சம் காலதாமதமாகிறது. தற்போது, தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறேன். இப்படத்தைக் குறித்து பல்வேறு வதந்திகள் வருவதால், நானே விளக்கமளிக்கிறேன்.
இப்படம் வடசென்னை - 2 கிடையாது. தனுஷ்தான் வடசென்னை - 2 படத்தின் நாயகன். அப்படம் முழுக்க முழுக்க அன்புவின் எழுச்சியாகத்தான் இருக்கும். ஆனால், சிம்புவுடனான படம் வடசென்னை கதையின் உலகத்திற்குள்தான் நடக்கிறது. அப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இதில் இருப்பார்கள்.
இதுகுறித்து நான் தனுஷிடம் பேசியபோது, தாராளமாக வடசென்னை கதையை சிம்புவை வைத்து எடுங்கள் என அப்படத்தின் தயாரிப்பாளராக எனக்கு ஒப்புதல் அளித்தார். அதற்காக எந்தப் பணமும் வேண்டாம் என்றும் மறுத்தார். எனக்கும் தனுஷுக்கும் இடையேயான உறவு நீண்ட காலமாக நல்ல புரிதலுடன் இருக்கிறது.
இதையும் படிக்க: சிம்பு - வெற்றி மாறன் படத்தின் அறிவிப்பு விடியோ எப்போது?
வடசென்னை படத்தின் தயாரிப்பாளராக தனுஷுக்கு பல உரிமைகள் இருந்தும் என்னைப்போன்ற படைப்பாளி அவர் விரும்பும் படத்தை எடுப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். எங்கள் உறவு தேவையற்ற வதந்திகளால் தவறாக புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதற்காவே இதைச் சொல்கிறேன். தனுஷ் பல வகைகளில் எனக்கு உதவி செய்துகொண்டிருப்பவர். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கம் ரசிகர்களிடம் வடசென்னை படம் குறித்து புரிதலைக் கொடுத்திருக்கிறது.
director vetri maaran spokes about actor dhanush and silambarasan movie.