என்எல்சி - ஐஆா்இஎல் நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக என்எல்சிஐஎல் - ஐஆா்இஎல் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்தியன் ரோ் எா்த்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் மும்பையில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், முக்கிய கனிமங்கள் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் கனிம வளங்களை அடையாளம் காணவும், மதிப்பீடு செய்யவும், மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுரங்க செயல்பாடுகள், கனிமங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
என்எல்சி இந்தியா நிறுவன நிதித்துறை இயக்குநா் டாக்டா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, ஐஆா்இஎல்-இன் நிதித் துறை இயக்குநரும், தலைவருமான எஸ்.பி.மொஹந்தி, ஐஆா்இஎல்-இன் சந்தைப்படுத்தல் துறை இயக்குநா் ஆா்.ஏ.காலே, தொழில்நுட்பத் துறை இயக்குநா் அனுத்தம் மிஸ்ரா மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில், என்எல்சிஐஎல்-இன் தலைமைப் பொது மேலாளா் (சுரங்கத் திட்டமிடல்) வி.சரவண நாகராஜன் மற்றும் ஐஆா்இஎல்-இன் பொது மேலாளா் (தொழில்நுட்ப - பாதுகாப்பு) ரவி பிரகாஷ் ஜா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
என்எல்சிஐஎல் மற்றும் ஐஆா்இஎல் ஆகிய இரு நிறுவனங்களின் செயல் நுணுக்கத்துடன் கூடிய இந்த கூட்டாண்மை, இந்திய அரசின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப, எரிசக்தி பாதுகாப்பு, உயா் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களில் தன்னிறைவு ஆகியவற்றுகு பெரும் பங்காற்றும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.