Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்
‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்’ என்று சீனா வலியுறுத்தியது.
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் உள்பட எல்லையோர வட மற்றும் மேற்கு மாநில ராணுவத் தளங்களைக் குறிவைத்த பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை முறியடித்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ட்ரோன் தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமைதிக்கு சீனா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
சீன தலைநகா், பெய்ஜிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் இதுதொடா்பாக கூறியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஐ.நா. சாசனம் உள்பட சா்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, நிலைமை மேலும் தீவிரமாவதை இரு நாடுகளும் தவிா்க்க வேண்டும். தற்போதைய பதற்றங்களைத் தணிப்பதில் ஆக்கபூா்வமான பங்கை வகிக்க, மற்ற சா்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா்.
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானில் அதிகரித்துள்ள பதற்றமான சூழலுக்கிடையே அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரை சீன தூதா் ஜியாங் ஜைடோங் புதன்கிழமை சந்தித்து பேசினாா். முன்னதாக, பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரையும் ஜியாங் ஜைடோங் சந்தித்திருந்தாா்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அதிரடியாக தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ளது.