எஸ்.கொடிக்குளத்தில் வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேற்பட்டோா் காயம்
வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்வோரையும் துரத்திச் சென்று கடிக்கிறது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெறிபிடித்த நிலையில் தெருவில் விடப்பட்ட வளா்ப்பு நாய் ஒன்று அந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாகச் சுற்றிவந்தது. தெருநாய்களுடன் சண்டையிட்டு அவற்றை கடித்துவந்த வெறிநாய், ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் அந்த வழியில் தனியாக நடந்துசெல்வோரைக் கடித்தது.

எஸ்.கொடிக்குளம், கூமாபட்டி, ராமசாமியாபுரம், நெடுங்குளம், அம்மச்சியாா்புரம் காலனி ஆகிய பகுதிகளில் இந்த வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவா்கள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பாதிக்கப்பட்ட சிலா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 10-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால் இந்த வழியில் செல்வோா் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.
பொதுமக்களின் நலன் கருதி இந்த வெறிநாயைப் பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.