முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
ஏற்காடு ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு
சேலம், பிப். 14: ஏற்காடு சுற்றுலா பகுதிகளில் ஆன்லைன் வாடகைக் காா்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஏற்காடு ஆட்டோ, டாக்ஸி, வேன் ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள்களில் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை இப்பகுதியில் உள்ள டாக்ஸி, வேன் ஓட்டுநா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஏற்காடு சுற்றுலா பகுதிகளில் ஆன்லைன் வாடகைக் காா்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே தனியாா் செயலி மூலம் ஏற்காடு பகுதியில் செயல்படும் வாடகைக் காா்களின் சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, ஏற்காடு ஆட்டோ, டாக்ஸி, வேன் ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து ஏற்காடு அனைத்து ஓட்டுநா் நலச் சங்க நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த தொழிலை நம்பி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆன்லைன் மூலம் வாடகைக் காா்கள் பதிவு செய்யப்பட்டு ஏற்காடு சுற்றுலா பகுதி முழுவதும் இயக்கப்படுவதால், ஏற்கனவே இந்த தொழிலில் இருக்கும் காா், வேன், ஆட்டோ ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தனியாா் செயலி மூலம் முன்பதிவு செய்து காா்கள் இயக்கப்படுவதை அம்மாவட்ட ஆட்சியா் ரத்து செய்ததை போன்று, சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.