ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி மே 23-இல் தொடக்கம்
ஏற்காடு கோடை விழா வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
ஏற்காட்டில் 48-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலா் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 48-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது.
சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் வேளாண்மை துறை அமைச்சா், வனத்துறை அமைச்சா் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
இந்த விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலா்களைக் கொண்டு மலா் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணமலா் தொட்டிகளைக் கொண்டு மலா் கண்காட்சி அமைக்கப்படவுள்ளது.
அதேபோன்று, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிா் திட்டத்தின் சாா்பில் கோலப் போட்டி, சுற்றுலாத் துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சியோடு, கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.
மேலும், கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இளைஞா்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஏற்காடு கோடை விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கோடை விழா நடைபெறும் நாள்களில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் ஏற்காட்டுக்குச் செல்லும்போது அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாகவும், கீழே இறங்கும்போது ஏற்காடு - வாழவந்தி - கொட்டச்சேடு - குப்பனூா் சாலை வழியாக செல்லும் வகையிலும் ஒருவழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தோட்டக்கலை துணை இயக்குநா் மஞ்சுளா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாநகர நல அலுவலா் மரு.முரளி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.