ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.
ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், தேவைபடுகிறது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 72,579 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 34,067 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.74 கோடி வசூலானது.