ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை
பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், கெடாரைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் மகன் வினோத் (30). லேத் பட்டறை கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (25), திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். இருவரும் வேலைக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலித்து இரு வீட்டாரின் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு பிருத்வி என்ற ஐந்து வயது மகன் உள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 40 நாள்களுக்கு முன்பு பெருந்துறை ஐயப்பன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் குடி வந்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பிரியா தான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கிவிட்டாா். இதனால், இருவருக்குள் பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வினோத், தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு, தானும் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.